“சென்னையில் ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வென்றுவிட்டால்…” – சேகர்பாபு சவால்

சென்னை: “சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார்.

மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரை பற்றியும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வசை பாடி உள்ளார். இந்நிலையில், அவர் அழைக்கிற மேடையில் அதிமுகவினர் போய் அமர்கிறார்கள் என்றால், அந்த இயக்கத்தை அடிமை சாசனத்துக்கு எழுதி விட்டார்கள் என்றுதான் அர்த்தம்.

மதுரை மாநாடு அரசியல் மாநாடுதான் என்பது பக்தர்களின் பார்வையாகும். ஒரு நாள் கூத்து 22-ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆட்சி சட்டத்தின்படி தான் நடக்கிறது. கோயில்கள் கூடாது என்பது அல்ல, அது கொள்ளையர்களின் கூடாரமாக மாறக்கூடாது என்பதுதான் கருணாநிதியின் ஆணித்தரமான கருத்தாகும். தற்போது கோயில்களை கொள்ளையர்கள் கூடாரமாக மாற்ற நினைக்கிறார்கள். நாங்கள் கோயில்களை ஆன்மிகவாதிகளின் கோயில்களாக மாற்ற நினைக்கிறோம்.

முருக பெருமான் முழுவதுமாக முதல்வர் ஸ்டாலினின் பக்கம்தான் இருக்கிறார். பவன் கல்யாண் சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒருவர் பச்சை துண்டை எடுத்து சுற்றிக் கொண்டிருக்கின்றார். பச்சை துண்டுக்கு சொந்தக்காரர் நயினார் நாகேந்திரன். இன்னொருவர் காவித் துண்டை எடுத்து சுற்றிக் கொண்டிருக்கின்றார். அந்த காவித் துண்டுக்கு சொந்தக்காரர் அண்ணாமலை. இருவரில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற போட்டிக்காக நடத்தப்பட்ட ஒரு மாநாடு தான் இது” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.