Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்ரேலின் உசுப்பேத்தலால் அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணு ஆயுதத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்த ஈரான், சற்றும் சளைக்காமல் இரண்டு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்துவருகிறது. அதில் ஒரு தாக்குதல்தான் கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதல்.

கத்தார் - அமெரிக்க விமான தளம்
கத்தார் – அமெரிக்க விமான தளம்

அல் உதய் விமான நிலையம்:

கத்தாரின் தோஹாவில் அமைந்திருக்கிறது அல்-உதெய்த் விமானப்படைத் தளம். 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) பரப்பளவில், கிட்டத்தட்ட 100 விமானங்கள் இருக்கின்றன. சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் இருக்கின்றனர். மேலும் இந்தத் தளம் அமெரிக்க மத்திய கட்டளையின் (CENTCOM) முன்னோக்கிய தலைமையகமாகவும் செயல்படுகிறது. இந்த தளம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்கிறது. மேலும் ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான மையமாகவும் உள்ளது.

ஈரான் தாக்குதல்:

‘இஸ்ரேலை தாக்குவதை விட எங்களுக்கு அமெரிக்காவை தாக்குவது எளிது’ என ஈரான் முன்னரே அமெரிக்காவை எச்சரித்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்படும் அல்-உதய் விமான நிலையம். ஈரான் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாகதான் இந்த விமான நிலையத்தை சரமாரியாக தாக்கியிருக்கிறது ஈரான்.

அமெரிக்க மீது தாக்குதல்
அமெரிக்கா மீது தாக்குதல்

இது தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம். நாங்கள் இலக்கு வைத்த தளம் கத்தாரில் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. அதனால், பொதுமக்களுக்கான ஆபத்து குறைவுதான்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் ஈரானிய இராணுவத்தின் சித்தாந்தப் பிரிவான புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்டதாக ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கத்தார் கண்டனம்:

கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படைத் தளத்தின் மீது, ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது கத்தார் நாட்டின் இறையாண்மையையும், வான்வெளி சட்டத்தையும், சர்வதேச சட்டத்தையும் அப்பட்டமாக மீறியதாகும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான தோஹாவிலிருந்து விமானங்கள் வேறு பகுதிகளில் தரையிறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ட்ரம்ப் மகிழ்ச்சி:

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் சமூகவலைதளப் பக்கத்தில், “கத்தாரில் உள்ள இராணுவத் தளத்தின் மீது ஏவுகணைகளை வீசுவதற்கு முன்னர் ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தது. அதனால் யாரும் உயிரிழக்கவில்லை. எந்த அமெரிக்கர்களும் பாதிக்கப்படவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன். இனி ஈரான் அமைதி, நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இஸ்ரேலுக்கும் இதையே ஊக்குவிக்கிறேன். உலகிற்கு வாழ்த்துக்கள், இது அமைதிக்கான நேரம்! அமெரிக்காவால் இனி எந்த பதிலடியும் இருக்காது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரான் உச்ச தலைதவர் அலி கமேனி
ஈரான் உச்ச தலைதவர் அலி கமேனி

போர் நிறுத்த அறிவிப்பும் ஈரான் பதிலும்:

தாக்குதல் குறித்து பகிர்ந்துகொண்டப் பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் 12 நாளாக தொடரும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.” எனப் முழுமையான போர்நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால் ஈரான் `போர்நிறுத்தம் குறித்து எந்த உடன்பாடும் இல்லை” என்று கூறி போர் நிறுத்தக் கூற்றுகளை நிராகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.