அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: அதிபர் டிரம்ப் நன்றி

வாஷிங்டன்,

ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் நேற்று முன்தினம் இணைந்தது. தனது பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை தாக்கியது. குறிப்பாக போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி அதிரடி காட்டியது. இதில் அணுசக்தி தளங்கள் பலத்த சேதமடைந்தன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. தங்கள் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்களுக்கு உரிமை உண்டு எனவும் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் படைகளுக்கு அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக நேற்று அந்த நாட்டின் கூட்டுப்படை தளபதி அப்துல் ரகிம் மவுசவி அறிவித்து இருந்தார்.

இதனால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் ஈரானின் ஏவுகணைகள் எட்டும் தூரத்திலேயே உள்ளன. ஈரானின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் அரசு தனது வான் எல்லையை மூடிவிட்டது.

ஆனால் இதையும் மீறி ஈரான் ராணுவம் நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. கத்தார் மட்டுமின்றி சிரியா நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஒரு ஏவுகணைத் தாக்குதலும், ஈராக் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வான்வழித் தாக்குதலையடுத்து கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், எகிப்து, குவைத், ஜோர்டான், லெபனான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்வெளியை மூடியுள்ளன. கத்தார் நாட்டில் பணிபுரியும் இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவ தளம் மீதான ஈரான் தாக்குதல் குறித்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை அழித்ததற்கு அதிகாரப்பூர்வமாக மிகவும் பலவீனமான பதிலடியைக் கொடுத்துள்ளது, நாங்கள் இதை எதிர்பார்த்தோம்; திறம்படவும் எதிர்கொண்டோம். ஈரான் வீசிய 14 ஏவுகணைகளில் 13 ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன. ஒரு ஏவுகணை மட்டும் அச்சுறுத்தல் அற்ற திசையில் சென்றதால், அதனை மட்டும் விட்டுவிட்டோம். இந்தத் தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை; எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வெறுப்பு இருக்காது என்று நம்புகிறேன். தாக்குதல் குறித்து, எங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்ததற்காக, ஈரானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன்னறிவிப்பால்தான், எந்தவொரு உயிரும் இழக்கப்படவில்லை; யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. இப்போதும்கூட அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஈரான் தொடர முடியும். இஸ்ரேலையும் அதனைச் செய்யவே நான் ஊக்குவிப்பேன். இந்தத் தாக்குதல் விவகாரத்தில் ஈரானின் கவனத்திற்காக நன்றி.

பிராந்தியத்திற்கு அமைதியை நிலைநாட்டிய கத்தார், எமிரேட்சுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று (அதாவது நேற்று) நடந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, காயமடையவில்லை என்பதை விட கத்தார் நாட்டைச் சார்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.