வாஷிங்டன்: “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் மீது குண்டுகளை வீச வேண்டாம். அது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் போர் விமானிகளை இப்போதே நாடு திரும்பச் சொல்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், “இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக நான் கருதுகிறேன்.போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் செய்த பின்னரும், இஸ்ரேல் வெளியே வந்து ஏராளமான குண்டுகளை வீசியுள்ளது. இது நான் இதற்கு முன்பு பார்த்திராத மிகப்பெரிய அளவிலான குண்டு வீச்சு.
நம்மிடம் இரண்டு நாடுகள் உள்ளன. அவை நீண்ட காலமாக மிகக் கடினமாக சண்டையிட்டு வருகின்றன. ஆனால் அவை தாம் என்ன செய்கின்றன எனத் தெரியாமலேயே இதை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.
இன்று போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில், ஈரான் தனது வான்வெளியில் ஏவுகணைகளை வீசியதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தீவிரமான தாக்குதலை தொடங்கியுள்ளது.
நடந்தது என்ன? – முன்னதாக ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இன்று 12-வது நாளை எட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முன்மொழிவின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதுகுறித்து பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், “அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக மீறியுள்ள ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளது. போர்நிறுத்த மீறலுக்கு பதிலளிக்கும் எங்களின் கொள்கையின்படி, ஈரானில் உள்ள அரசு சொத்துக்கள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து அதிதீவிர நடவடிக்கைகளைத் தொடர நான் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறினார். இதனையடுத்து ஈரான் மீதான தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.
இருப்பினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஈரான் உறுதியாக மறுத்துள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னர் இஸ்ரேல் மீது எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.