திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகள் சொல்வது என்ன?

மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் உரிய முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க கோரியும், ராமலிங்கம் என்பவர் திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கக் கோரியும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில், தர்காவை பராமரிக்க அனுமதி வழங்கவும், தர்காவுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரியும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தில் வக்பு வாரியம், முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ உட்பட பலர் சார்பில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், ‘தர்காவுக்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.

இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமின்றி பிற சமயங்களை சேர்ந்தவர்களும் இதுபோல் வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் 1991-ல் கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு விதிப்படி, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் ஒரு வழிபாட்டு தலம் எப்படி இருந்ததோ, அதே முறையிலேயே அது பராமரிக்கப்பட வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலையை இந்து அமைப்புகள் ஸ்கந்த மலை என்றும், இஸ்லாமிய அமைப்புகள் சிக்கந்தர் மலை என்றும், சமணர்கள் சமணர் குன்று என்றும், உள்ளூர் மக்கள் திருப்பரங்குன்றம் மலை என்றும் அழைக்கின்றனர். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பழமையானது. அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த மலையில் தர்கா மற்றும் சமணர் கோயில் உள்ளன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஏற்கெனவே முடிவு காணப்பட்டுள்ளது. அதில் தலையிட வேண்டியதில்லை.

ஆடு, கோழி பலியிடுவது என்பது தர்காவில் மட்டும் அல்ல, திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள இந்து கோயில்களிலும் உள்ளது. பலியிடுதல் மதப் பழக்கத்தில் ஒன்றாகும். இதை மாவட்ட ஆட்சியரும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பழக்கம் தொடர திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அனைத்து தரப்பு மக்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் வழிபாட்டு ஸ்தலங்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலையின் தெற்கு பகுதியில் தர்கா அமைந்துள்ளது. சுப்பிரமணியசுவாமி கோயில், காசி விஸ்வநாதர் கோயில் வேறு பகுதியில் உள்ளது. இதனால் ஒரு மதத்தின் பழக்கம் மற்ற மதத்தினரை பாதிக்காது.

திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை கூறியுள்ளது. மலையை பாதுகாப்பது முக்கியமாக இருந்தாலும், அங்கு நடைபெறும் மத நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டியதில்லை. அதே நேரத்தில் மலையில் புதுப்பித்தல், கட்டுமானம் என எந்த பணி மேற்கொள்வதாக இருந்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். மலையில் மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்தும் போது மலையின் கட்டுமானம் பாதிக்கப்படும். மலைப்பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் ஆட்களை அனுமதிப்பதில்லை. இதனால் மின் இணைப்பு தேவையில்லை.

மொத்தத்தில் திருப்பரங்குன்றத்தில் அமைதி நிலவ வேண்டும். மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும். இதை சீர்குலைக்க நினைக்கும் நபர்கள், அமைப்புகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி ஜெ.நிஷாபானு உத்தரவில் கூறியுள்ளார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றோ சமணர் குன்று என்றோ அழைக்கப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் எவ்விதமான குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. தர்காவில் கந்தூரி விழா நடத்தி ஆடு, கோழிகளை பலியிடுவதற்கும், ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமிய புனித நாட்களில் தொழுகை செய்யும் உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டும். அதே நேரத்தில் சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம்.

திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கெனவே வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மலை மேல் மாலை 6 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதனால் மலை மேல் மின்சார வசதி செய்யப்பட வேண்டியதில்லை. சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டால் திருப்பரங்குன்றம் மலை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, அந்த நிவாரணங்களையும் வழங்க இயலாது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் தர்காவுக்கும் தண்ணீர் கொண்டு செல்லாம்.

தர்காவின் புனரமைப்பு பணிகளுக்காக தர்காவின் அறங்காவலர் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணிகளை செய்யலாம். மத்திய தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் சர்வே செய்ய அனுமதிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பழங்கால சின்னங்களான கோயில் மற்றும் தர்காவின் எல்லைகளை குறிக்க சர்வே செய்யலாம். ஓர் ஆண்டுக்குள் சர்வேயை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவில் கூறியுள்ளார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருப்பதால் இந்த வழக்கு உரிய முடிவுக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.