பெதுல்: மத்திய பிரதேச மாநிலம் பெதுலைச் சேர்ந்தவர் மங்காராம். இவர் கடந்த 1983-ம் ஆண்டு போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்தபோது தனது கிளைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகை ரூ.3,596-ஐ பதிவேட்டில் பதிவு செய்ய மறந்துவிட்டார். ஆனால் அந்த தொகையை முறைப்படி அரசு கருவூலத்தில் செலுத்தி வாடிக்கையாளரின் பாஸ்புக்கிலும் வரவு வைக்கப்பட்டுவிட்டது.
மங்காராம் செய்த செயலில் எந்தவொரு நிதி முறைகேடும் இல்லாத போதிலும் அந்தப் பிழை குற்றவியல் மோசடியாக கருதி கடந்த 1993-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் மங்காராமுக்கு ஐபிசி 409 பிரிவின் கீழ் சிறிய தண்டனையாக கோர்ட் கலையும் வரை நீதிமன்றத்திலேயே நிற்க வைத்ததுடன் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் செஷன்ஸ் நீதிமன்றமும் மங்காராம் தண்டனையை உறுதி செய்தது. ஆனாலும், தான் உள்நோக்கத்துடன் எந்த தவறையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருந்த போஸ்ட்மாஸ்டர் மங்காராம் விடாமுயற்சியாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரின் விடா முயற்சிக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் கிடைத்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பட்டி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி, “ மங்காராம் செய்த செயல் ஒரு ஒழுங்குமுறை குறைபாடு மட்டுமே. அது ஒரு கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது.
இத்தகைய தீர்ப்புகளை வழங்குவதற்கு முன்பாக ஒரு செயல் குற்றநோக்கத்துடன் செய்யப்பட்டதா என்பதை கீழமை நீதிமன்றங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதுடன் மங்காராம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தீர்ப்பளித்தார்.