‘பசங்க’ திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்களை என்றும் மறக்க முடியாது. சிறுவயதிலேயே அவரவரின் கதாபாத்திரங்களுக்கு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தனர்.
அவர்களுள் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஶ்ரீராமுக்கு அப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

அப்படத்தைத் தாண்டி ‘கற்றது தமிழ்’, ‘கோலி சோடா’ உட்பட பல படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
சினிமாவைத் தாண்டி தற்போது அவர் கார்பன் கேப்சர் டெக்னாலஜி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஶ்ரீராம், தற்போது தன்னுடைய காதலி நிகில் ப்ரியாவை கரம் பிடித்திருக்கிறார்.
இன்னும் குழந்தை நட்சத்திரமாகவேதான் பார்க்கிறாங்க!
திருமணத்துக்கு வாழ்த்துகள் சொல்லி ஶ்ரீராமிடம் பேசினோம். நம்மிடையே பேசத் தொடங்கிய அவர், “நன்றிங்க…நான் இப்போ ஒரு கார்பன் கேப்சர் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்தி வரேன். அதன் மூலமாகத்தான் எனக்கு நிகில் ப்ரியா அறிமுகமானாங்க. அப்படித்தான் எங்களுடைய காதலும் தொடங்கிச்சு.
சமூக வலைதளங்கள்ல வர்ற பதிவுகளை நானும் பார்த்துட்டுதான் இருக்கேன். (சிரித்துக்கொண்டே…) சின்னப் பையனா இருந்தவருக்கு கல்யாணமானு பதிவு போடுறாங்க. மக்கள் இன்னும் குழந்தை நட்சத்திரமாகவேதான் பார்க்கிறாங்க.
ஆனா, எனக்கு 29 வயசாகுது. அதுதான் உண்மைன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டேங்குறாங்க,” என்றவர், அவருடைய பார்ட்னர் குறித்து, “என்னுடைய பார்ட்னர் நிகில் ப்ரியா ரொம்பவே உறுதுணையாக இருப்பாங்க. ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக யோசிச்சு சரியாகப் பண்ணுவாங்க.
என்னை வழிநடத்தும் நபரும் அவங்கதான். இப்படியான விஷயங்கள்தான் பரஸ்பரம் எங்களுக்குள்ள ஒத்துப்போனது. நான் இப்போ ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவிலதான் என்னுடைய நிறுவனத்தை நடத்தி வரேன்.
7-8 வருஷமாக கார்பன் கேப்சர் டெக்னாலஜி மூலமாக ஒரு விஷயத்தைப் பண்றதுக்கு முழுமையாக ஈடுபட்டு பணிகளைக் கவனிக்கிறேன். அதுல முழுமையாக ஈடுபட்டு வந்ததுனாலதான் என்னால சினிமாவுல பெரிதாக கவனம் செலுத்த முடியல. எனக்குள்ள இப்படியான பக்கமும் இருக்கு.
என்னுடைய பார்ட்னர் நிகில் ப்ரியாவுக்கு சினிமாவைவிட என்னுடைய இந்தப் பக்கம்தான் தெரியும். நாங்க பணி சார்ந்துதான் அதிகமாக இயங்கியிருக்கோம்.
அவங்களும் அண்ணா பல்கலைக்கழகத்துல ஆர்க்கிடெக்சர்தான் முடிச்சிருக்காங்க. இப்போ திருமணமானதும் என்னைப் பற்றி வர்ற விஷயங்களெல்லாமே அவங்களுக்கு ரொம்பப் புதுசாக இருக்கு.
என்னைச் சந்திக்கிற எல்லோருமே என்னுடைய சினிமா பக்கத்தை வச்சு பேசுவாங்க. ஆனா, என்னுடைய பார்ட்னர் அப்படிக் கிடையாது. என்னுடைய பணி சார்ந்த பக்கத்தையும், பர்சனல் பக்கத்தையும் தெரிஞ்சுகிட்டு, அதுதொடர்பாகத்தான் பேசினாங்க.” என்றார்.
மேலும் பேசிய அவர், “காதல், இப்போ திருமணத்துல முடிஞ்சிருக்கு. திருமணம் பண்ணப்போறோம்னு முடிவு பண்ணினதும், எங்களுடைய வாழ்க்கையை சரியாகவும் பொறுப்பாகவும் கொண்டு போகணும்னு நாங்க முடிவு பண்ணினோம். இனி வருங்காலத்திலும் எங்களுக்கு இருக்கிற பொறுப்புகளை சரியாகக் கையாளணும்னு முடிவு பண்ணியிருக்கோம்.
எங்களுடைய குறிக்கோளும் அதுதான். நான் நடிச்ச படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு எல்லோரிடமும் திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எல்லோரும் சந்தோஷப்பட்டு வாழ்த்தினாங்க. (சிரித்துக்கொண்டே…) சிலர் ‘சின்னப் பையன்தானே நீ’ன்னு சொன்னாங்க.
பிறகு நான் சொன்னதும்தான் ரியாலிட்டி அவங்களுக்கு தெரிய வந்தது. ராம் சாருக்கும் திருமணத்துக்கு சொல்லியிருந்தோம். அவரும் சந்தோஷப்பட்டு வாழ்த்தினாரு. இப்போ அவர் ‘பறந்து போ’ ப்ரோமோஷன்ல இருப்பதுனால அவரால திருமணத்துக்கு வர முடியல.
என்னுடைய பழைய இயக்குநர்களைச் சந்திக்கும்போது, படம் வெளியாகி இத்தனை வருஷம் ஓடினதே எங்களுக்குத் தெரியல,” என்றபடி முடித்துக்கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…