‘ஐந்து ஆண்டுகளும் நான்தான் முதல்வர்’ – சித்தராமையா உறுதி; டி.கே. சிவகுமார் எதிர்வினை!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா இன்று உறுதியாக தெரிவித்தார். இந்தச் சூழலில், ‘கட்சித் தலைமையின் முடிவைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை’ என துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறினார்.

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையாவை மாற்றிவிட்டு, டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்பார் என கடந்த சில வாரங்களாக பலமான விவாதங்கள் எழுந்தன. சிவக்குமாருக்கு ஆதரவாக பல எம்.எல்.ஏக்களும் குரல் எழுப்பினர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “நான் ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருப்பேன். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “நான் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும், நான் அவரை ஆதரிக்க வேண்டும். கட்சியின் தலைமை என்ன சொன்னாலும் நான் அதைச் செய்ய வேண்டும். இதைத்தவிர எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது ” என்றார்.

கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்த அரசியல் உரையாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. முன்னதாக, நேற்று கர்நாடகாவில் எந்த தலைமை மாற்றமும் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டி.கே.சிவக்குமார், “ஒழுக்கம் காங்கிரஸின் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது. எனக்கு யாருடைய ஆதரவும் வேண்டாம். நான் இப்போது முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. 2028-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதைப் பார்ப்பதே எனது விருப்பம். அதுதான் எனது முன்னுரிமை.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.