சென்னை: “காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் ஒரே வரியில் ‘சாரி’ எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம் “சாரி மா” என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஓர் அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்?
இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை? சரி, ஒருவேளை மனம் உவந்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், இதோ முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் காவல் நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோது சந்தேகத்துக்குரிய வகையிலும் இறந்தவர்களின் பட்டியல்:
பிரபாகரன் (45) – நாமக்கல்
சுலைமான் ( 44) – திருநெல்வேலி
தாடிவீரன் (38) – திருநெல்வேலி
விக்னேஷ் (25) – சென்னை
தங்கமணி (48) – திருவண்ணாமலை
அப்பு (எ) ராஜசேகர் (31) – சென்னை
சின்னதுரை (53) – புதுக்கோட்டை
தங்கபாண்டி (33) – விருதுநகர்
முருகானந்தம் (38) – அரியலூர்
ஆகாஷ் (21) – சென்னை
கோகுல்ஸ்ரீ (17) – செங்கல்பட்டு
தங்கசாமி (26) – தென்காசி
கார்த்தி (30) – மதுரை
ராஜா (42) – விழுப்புரம்
சாந்தகுமார் (35) – திருவள்ளூர்
ஜெயகுமார் (60) – விருதுநகர்
அர்புதராஜ் (31) – விழுப்புரம்
பாஸ்கர் (39) – கடலூர்
பாலகுமார் (26) – ராமநாதபுரம்
திராவிடமணி (40) – திருச்சி
விக்னேஷ்வரன் (36) – புதுக்கோட்டை
சங்கர் (36) – கரூர்
செந்தில் (28) – தருமபுரி
இவர்கள் உள்ளிட்ட 23 பேரின் பெற்றோரிடமும், மனைவி – மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் புகைப்படம் – வீடியோ ஷூட் எப்போது நடக்கும்?” என்று அதில் கூறப்பட்டுள்ளது.