நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 19) முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர். திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஜூலை 20) நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 9 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.