லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இதன்படி நேற்று லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை இன்று பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(Free Trade Agreement) எனப்படும் முக்கிய ஒப்பந்தம் இந்தியா-இங்கிலாந்து இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சந்தைப்படுத்துதல் மேம்படும் என்றும், இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் சுமார் 34 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தயாராகும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்டவை இந்தியாவில் விலை குறையும்.
இந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும் எனவும், இரு நாடுகளும் இதன் மூலம் பயனடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்தில் விதிக்கப்படும் வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறையும். அதே சமயம், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரி 150 சதவீதத்தில் இருந்து 40 சதவீமாக குறையும்.
இந்தியா-இங்கிலாந்து இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக இங்கிலாந்துடனான ஒப்பந்தத்திற்கு மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருந்தது. அதே சமயம், இந்த ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர சுமார் 12 முதல் 15 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.