ஆசிய கோப்பையில் இடம் பெரும் 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்! யார் யாருக்கு வாய்ப்பு?

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தொடங்க உள்ளது. டி20 வடிவில் இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த தொடரில், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் 4 பேருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)

இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவின் இடம் அணியில் நூறு சதவீதம் உறுதியானது. ஐபிஎல் 2025 தொடரின் முடிவில், ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், சுமார் மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்தார். ஆனால், தற்போது முழு உடற்தகுதி பெற்று, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளார். ஐபிஎல் 2025 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் 717 ரன்களைக் குவித்து, தொடரின் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player) விருதை வென்றார். அவரது அதிரடியான பேட்டிங்கும், கேப்டன்சி அனுபவமும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் இடமும் அணியில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அணிக்கு தேவையான சமநிலையை வழங்கும் திறன் கொண்டவர் ஹர்திக். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதில் முக்கிய பங்காற்றிய இவரது அனுபவம், ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அணிக்கு மிகவும் அவசியமானது. மேலும், அணியின் முக்கிய ஃபினிஷர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஹர்திக் சிறப்பாக விளையாடி இருந்தார்.

திலக் வர்மா

இளம் இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா, கடந்த சில ஐபிஎல் சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் விளையாடியுள்ள இவர், மிடில் ஆர்டரில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். இவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறன் ஆகியவை, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல உள்ளூர் அணிகளில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளதால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

ஜஸ்பிரித் பும்ரா

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, எந்த ஒரு அணியிலும் இருக்க வேண்டிய முக்கிய வீரர் ஆவார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தூணாக விளங்கும் இவரது இடம் கேள்விக்கு அப்பாற்பட்டது. இருப்பினும், தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிவரும் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு, இந்த ஆசிய கோப்பைத் தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பும்ரா விளையாடும் பட்சத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு தலைமை தாங்குவார் என்பதில் சந்தேகமில்லை. இந்த நான்கு வீரர்களும், ஆசிய கோப்பையில் இந்திய கொடியை உயர்த்தி பிடிப்பதற்கான பிரகாசமான வாய்ப்புகளை கொண்டுள்ளனர். பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.