சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து 48 மணி நேரத்தில் இது வலுவடையக்கூடும்.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77-78.8 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திரா-ஒடிஸா கடலோரப் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, மீனவர்கள் கட லுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.