வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது உக்ரைனுக்கு எதிரான போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.
இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று பிறப்பித்தது. இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை டிரம்ப் நிர்வாகம் நேற்று பிறப்பித்தது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும்.
அந்த அறிவிப்பில், ரஷியாவால் அமெரிக்காவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக புதிய வரிவிதிப்புகள் அமல்படுத்தப்படும். இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு கிடைக்கும் வருவாய் பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதிலாக டிரம்ப் கூறும்போது, நாங்கள் இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம்.
அதனால் வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல… டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
அவர் அதற்கு முன்பு ட்ரூத் சோசியலில் வெளியிட்ட செய்தியில், இந்தியா எங்களுடைய நட்பு நாடு என்றபோதிலும், அவர்களுடைய வரி விதிப்பு அதிக அளவில் உள்ளது. அது உலகிலேயே மிக அதிகம். வேறு எந்த நாட்டையும் விட நிதி சாராத வர்த்தக தடைகளை இந்தியா கொண்டுள்ளது என்றும் குற்றச்சாட்டாக பதிவிட்டார்.
ரஷியாவுடன் சேர்ந்து அதிக அளவில் ராணுவ தளவாடங்களையும் அவர்கள் வாங்கி வருகின்றனர் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.