இந்த பதக்கம் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும்: சிராக் ஷெட்டி நெகிழ்ச்சி

பாரீஸ்,

சமீபத்தில் பாரீசில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. உலக பேட்மிண்டனில் 2-வது முறையாக பதக்கத்தை ருசித்த சிராக் ஷெட்டி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூ யிக் இணையை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தோம். அவர்களுக்கு எதிரான வெற்றி எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஏனெனில் இதே மைதானத்தில் தான் கடந்த ஆண்டு ஒலிம்பிக் காலிறுதியில் ஆரோன் ஜோடியிடம் தோற்று பதக்க வாய்ப்பை நழுவ விட்டோம். அந்த வலி, வேதனைக்கு அதே இடத்தில் பரிகாரம் தேடியிருப்பது உண்மையிலேயே சிறப்பானது தான்.

இதே போல் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவில் இருந்து சாய்னா நேவால் (2 பதக்கம்), பி.வி.சிந்து (5 பதக்கம்) ஆகியோர் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்கள் வென்றிருக்கிறார்கள். அவர்களுடன் சாதனை வரிசையில் நாங்களும் இணைந்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பதக்கம் எங்களின் நம்பிக்கையை நிச்சயம் அதிகரிக்க செய்யும். தொடர்ந்து வலுவான உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களது முதல் இலக்கு. அடுத்து, இனி வரும் போட்டியில் இறுதி சுற்றை எட்ட வேண்டும். அதை செய்வோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சிராக் ஷெட்டி கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.