வாஷிங்டன்,
உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச உள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷியா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்டு டிரம்ப் பேசியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் இப்போது அதிபர் புதினுடன் பேசி வருகிறேன். இந்த நீண்ட உரையாடல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதன் உள்ளடக்கங்களை நான் விரைவில் தெரிவிப்பேன், புதினும் இது குறித்து தெரிவிப்பார்” என்று பதிவிட்டுள்ளார். நாளை ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இன்று ரஷிய அதிபருடன் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.