Sunrisers Hyderabad : ஐபிஎல் 2026 தொடருக்கு பத்து ஐபிஎல் அணிகளும் தயாரிப்பை தொடங்கிவிட்டன. டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கும் நிலையில், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் எந்தெந்த பிளேயர்களை தக்க வைக்கிறார்கள், யாரை எல்லாம் விடுவிக்கிறீர்கள் என்பதை அனைத்து அணிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இதற்காக சென்னை, மும்பை, சன்ரைசர்ஸ் உள்ளிட்ட அணிகள் ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டன. அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணி மூன்று ஸ்டார் பிளேயர்களை ஏலத்துக்கு முன்பாக அணியில் இருந்து விடுவிக்க உள்ளது. கடந்த சீசனில் SRH அணி 14 போட்டிகளில் ஆறில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்த அந்த அணி, கடந்த ஐபிஎல் போட்டியில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாத பிளேயர்களை கழற்றிவிட உள்ளது.
Add Zee News as a Preferred Source
சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்புள்ள மூன்று முக்கிய வீரர்கள்:
1. முகமது ஷமி (Mohammed Shami) – ரூ.10 கோடி
கடந்த சீசனில் ரூ. 10 கோடிக்கு வாங்கப்பட்ட அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி-யை விடுவிப்பது குறித்து SRH ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஐபிஎல் 2025 சீசன் அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. அவர் விளையாடிய 9 போட்டிகளில் வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். மேலும், அவரது எக்கானமி விகிதம் 11.23 என்ற அளவில் அதிகமாக இருந்தது. இவரது ஃபார்மில் ஏற்பட்ட திடீர் சரிவு அணிக்கு பெரும் இழப்பைக் கொடுத்தது. ஷமியை விடுவிப்பதன் மூலம் அணிக்கு ரூ. 10 கோடி மிச்சமாகும்.
2. இஷான் கிஷன் (Ishan Kishan) – ரூ. 11.25 கோடி
இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான இஷான் கிஷன், கடந்த ஆண்டு SRH-ன் பிரதான வீரர்களில் ஒருவர். எனினும், அணியில் ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற இடது கை தொடக்க ஆட்டக்காரர்கள் இருந்ததாலும், விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஹென்ரிச் கிளாசன் கவனித்துக் கொண்டதாலும், கிஷன் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். இந்த இடத்தில் அவர் 138 ரன்கள் (சராசரி 26.60) மட்டுமே எடுத்தார். கிஷன் மொத்தமாக 14 போட்டிகளில் 354 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது விலைக்கு ஏற்ப நிலைத்தன்மையை அளிக்கவில்லை. அவரை விடுவிப்பதன் மூலம் SRH-க்கு ரூ. 11.25 கோடி கூடுதல் நிதி கிடைக்கும்.
3. ராகுல் சாஹர் (Rahul Chahar)
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்ட சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர்-க்கு கடந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அதற்குப் பதிலாக, SRH அணி மிகக் குறைந்த விலையில் வாங்கப்பட்ட இளம் சுழற்பந்து வீச்சாளர்களான ஜீஷன் அன்சாரி மற்றும் ஹர்ஷா தூபே (இருவரின் மொத்த விலை ரூ.60 லட்சம் மட்டுமே) ஆகியோருக்கு அதிக வாய்ப்பு வழங்கியது. இதனால், ராகுல் சாஹரையும் அணி விடுவிக்க வாய்ப்புள்ளது.
SRH அணி நிர்வாகம், அதிக ஊதியம் பெறும் வீரர்களை விடுவித்து, அந்தப் பணத்தை வைத்து ஒரு வலுவான அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த மூன்று பிளேயர்களின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.