பைசன்: "என் வாழ்க்கை வேறு; உங்க வாழ்க்கை வேறு" – சினிமா பயணம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்

பைசன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துருவ், நடிகை ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இத்தனை வருஷம் கழிச்சு இந்த ஊர்ல இருந்து நான் ஓடி போய், ஆல்ரெடி ஜெயிச்சு ஆணிவேரா இருக்கக்கூடிய ஒரு ஆள திருப்பி கொண்டாட வச்சிருக்கேன் அப்படிங்கிற பெருமை எனக்கு இருக்கு.

Bison Team in Thirunelveli Ram Muthuram cinemas
Bison Team in Thirunelveli Ram Muthuram cinemas

ஏன்னா அவர தெரிஞ்சுக்கறது மூலமாக ஒரு கபடி பிளேயர் கிட்ட எவ்வளவு ஒழுக்கம் இருக்கணும், கபடி பிளேயர் எவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி வரணும்னு காட்ட நினைச்சேன். முறுக்கேறிய ஒரு கபடி வீரன் எப்ப வேணாலும் உணர்ச்சிசப்படக்கூடிய ஆள், ஆனா சவுத்ல இருக்கற வாழ்க்கையில அவன் உணர்ச்சிவசப்பட்ட கூடாது. அவன் எல்லாத்தையும் தாண்டி வரணும்.

ஏன்னா முக்குக்கு முக்கு கபடி விளையாடுற பிள்ளைங்கதான் இருக்காங்க. ஏதோ வகையில கபடி பிள்ளையைத் தடம்மாத்திடும்னு பயம் இருந்துச்சு.

“கபடி வீரரின் ஒழுக்கம்”

என்கிட்ட, “உண்மையிலே கணேசன் இப்படியே வாழ்ந்தாப்பலயா”ன்னு கேட்டாங்க. இதைவிட அவர் வந்து ரொம்ப நேர்கோட்ல வாழ்ந்துருக்காரு. நான் சினிமாவுக்காக, நிறைய நிஜ கதை சொல்றதுக்காக சில விஷயங்கள சேர்த்துக்கிட்டேன். ஆனா அவர் வாழ்க்கையில என்னையால நம்ப முடியாத அளவு ஒழுக்கமா, ஒரு நூல் பிடிச்ச மாதிரி வாழ்ந்துருக்காரு. அவருடைய வாழ்க்கையைக் கேட்கும்போது பெரிய பிரமிப்பா இருக்கும். அந்த வாழ்க்கையை இன்னைக்கு ரத்தமும் சதையுமா கடத்திட்டோம்.

நான் 20 வருஷமா கத்துக்கிட்ட சினிமாவ வச்சு ஒரு மிகப்பெரிய ஜாம்பவனோட மிகப்பெரிய ஒரு திறமையாளரோட வாழ்க்கையை அப்பட்டமா கடத்திட்டோம் அப்படிங்கறது பெரிய சந்தோஷம்” என்றார்.

பைசன் படத்தில் துருவ்
பைசன் படத்தில் துருவ்

மஞ்சனத்தி என்பது என்ன?

மஞ்சனத்தி குறித்த கேள்விக்குப் பதிலளித்த மாரி செல்வராஜ், “மஞ்சனத்தி அப்படிங்கறது ஒரு மரம். சின்ன வயசுல ஆடு மாடு மேய்க்க போகும்போது அந்த மரத்தோட நிழல்லதான் இருப்பேன். எங்க அம்மா சொல்லுவாங்க மஞ்சனத்தி அப்படின்னா ஒரு தெய்வம்னு. இறந்து போன ஒரு தெய்வம் சொல்லுவாங்க.

ஆடு மைக்க போகும்போது ஏதாவது பொண்ணு வந்து கூப்பிட்டா போயிடக்கூடாது, ஏதாவது சேல கட்டி வருவாங்க சாப்பிடுறியான்னு கேப்பாங்க, தண்ணி வேணுமான்னு கேப்பாங்க, அதெல்லாம் வந்து ஆள் கிடையாது, அதெல்லாம் வந்து பேய்னு எங்க அம்மா சொல்லிருப்பாங்க.

அந்தக் கதையைக் கேட்டு கேட்டு தூரத்துல யாராவது பொண்ணு போனா கூட நான் மஞ்சனத்தியா இருக்குமோன்னு பயப்படுவேன். அது என் வாழ்க்கையில பெரிய மெட்டாஃபரா ஆயிடுச்சு. என் வாழ்க்கையில வந்துட்டு போன எல்லா தோழிகளுக்கும், என் லைஃப்ப வடிவமைச்ச என் லைஃப்ப ஒரு பெருமையா மாத்துன எல்லா பெண்களுக்கும் ஒட்டுமொத்தமா நான் வச்ச பேரு மஞ்சனத்தி” எனப் பேசினார்.

“திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் மீதான நரேட்டிவை மாற்றுவதற்காகத்தான் இந்தப் படம் எடுத்திருக்கிறேன். இங்கு என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அது (சாதி) குறித்துப் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதனால் அது அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு சின்ன சின்ன உரையாடல்களை ஏற்படுத்தி இதிலிருந்து பேசி முடித்துவிட்டால் தீர்ந்துவிடும். ஆனால் அதைச் சேர்த்து சேர்த்து வைக்கும்போது பாம் போல வெடித்துவிடுகிறது.

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன், கணேசன் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கார் என்பது எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் இனி வரும் இளைஞர்கள் படக் கூடாது என்பதற்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்” என மாரி செல்வராஜ் பேசியபோது, செய்தியாளர் ஒருவர், “90களில் இருந்த நிலவரம் வேறு, இன்றைய நிலவரம் வேறு, இன்று யாரும் சாதி பார்க்காதபோது நீங்கள் அதைப் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் கூறுகின்றார்களே” எனக் கேட்டபோது…”

“அதற்காக கணேசன் அண்ணனின் கதையைச் சொல்லக் கூடாது என்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

பைசன் திரைப்பட விழா: மாரி செல்வராஜ் - மணத்தி கணேசன்
பைசன் திரைப்பட விழா: மாரி செல்வராஜ் – மணத்தி கணேசன்

மேலும் அந்தச் செய்தியாளர், “இதுபோன்ற படங்களை எடுப்பது ஏன்” எனக் கேள்வி எழுப்பியபோது, “ஒரு கதை ஏன் எடுக்கப்படுகிறது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதற்காக சென்சார் இருக்கிறது எல்லாவற்றுக்கும் உட்பட்டுதான் நான் படம் எடுக்குறேன். தனிமனிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நான் படம் எடுக்க முடியாது.

நான் இந்த நாட்டுடைய பிரஜை. என்னைப் பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதையைச் சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நான் சாகும் வரை சொல்லுவேன்” என்றார்.

“இது சமூகத்தைப் பாதிக்கும்” என்ற வகையில் பத்திரிகையாளர் இடைமறித்தபோது, “அதை என் அரசாங்கம் முடிவு செய்யும். என் சட்டம் முடிவு செய்யும். நான் கதை யோசிக்கும்போதே இதற்கெல்லாம் உட்பட்டுதான் எழுதுகிறேன்.

உங்க வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு. உங்க வாழ்க்கையின் வழியாகவே இதைப் பார்க்கக் கூடாது” எனப் பதிலளித்தார்.

மேலும் அந்தச் செய்தியாளர், “மாரி செல்வராஜ் இப்படி படம் எடுப்பார் என்ற ஸ்டாம்ப் குத்தக் கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்” என்றபோது, “அதெல்லாம் இல்லை. மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவர் என்ற ஸ்டாம்ப் குத்தப்படும். மாரி செல்வராஜ் சாதியால நெருக்கடிக்கு உள்ளான ஆள், தமிழ்சினிமாவில் அப்படி ஒரு ஆள் இருக்கிறாரா எனத் தெரியாது. ஆனால் இந்த இடத்துக்கு வர மாரி செல்வராஜ் பட்ட வலியும் வேதனையும் அவனுக்குத்தெரியும். அதை மறந்துட்டு சாதாரண ஆள் போல டான்ஸ் ஆடு, பாட்டுப்பாடு என்றால் என்னால் முடியாது. மாரி செல்வராஜ் தொடர்ந்து சாதியை எதிர்ப்பான்.

என் 5 படத்தையும் என் சி.எம் பாராட்டியிருக்கார், என் அரசு பாராட்டியிருக்கிறது, எனக்கு விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, தமிழகம் என்னைக் கொண்டாடுகிறது. ஆனால் நீங்கள் எங்கேயோ ஒரு ஐந்து பேர் உக்கார்ந்து பேசுவதை நரேட்டிவாக செட் பண்ண நினைக்கிறீர்கள்.

இந்த நரேட்டிவை மாற்ற வேதனையும் வலியுமாக நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம். சமூகங்களுக்கிடையே சாதியைப் பற்றி தெளிவான புரிதலை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் படம் எடுக்கிறோம். ஆனால் யாரோ 10 பேர் சொல்வதை மீண்டும் நரேட்டிவாக மாற்ற முயல்கிறீர்கள். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். ஆப்ரேஷன் பண்ணும்போது நோயாளி கத்தத்தான் செய்வார்கள், ஆனால் நோயைப் போக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.

“1.5 வருஷம் யாருக்கும் தெரியாமல் திருநெல்வேலியில் இருந்தேன்” – துருவ்

செய்தியாளர்களிடம் பேசிய துருவ், “நான் கஷ்டம்னு சொல்ல மாட்டேன் அது வந்து எனக்கு ஒரு பெரிய லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ இருந்துச்சு. ஏன்னா தென்மாவட்டம் பக்கம் நீங்க பாத்தீங்கன்னா எல்லாரும் கபடி ஆடுவாங்க. கபடி ஏன் பிடிக்கும் நீங்க கேட்டீங்கன்னா கூட ஒரு பதில் இருக்காது.

ஒவ்வொரு பசங்களோட இரத்தத்துலயும் ஊறி போயிருக்கு கபடி. இதுவரைக்குமே நான் என் வாழ்க்கையில ஒரு கேம அவ்வளவு விளையாண்டது இல்ல.

கபடி ஃபர்ஸ்ட் பஃர்ஸ்ட் நான் இந்தப் படத்துக்காகதான் கத்துக்க ஆரம்பிச்சேன். அது நான் கஷ்டம்னு சொல்ல மாட்டேன், நான் ரொம்ப நாள் திருநெல்வேலியில இருந்தேன் நான் இங்க இருக்கேன்னு யாருக்கும் தெரியாது. ஆக்சுவலா ஒரு ஒன்னரை வருஷம் இருந்திருப்பேன்.

இந்த வாழ்க்கை பத்தியும், இங்க இருக்கற மக்கள், அவங்களோட கதைகள் எல்லாம் கேட்டது வந்து என் வாழ்க்கையில ஒரு நடிகனா மட்டும் இல்ல ஒரு ஒரு மனிதனாவும் மிக முக்கியமான தருணமா நான் பார்க்கிறேன்” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.