ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், தனது கட்சியினருடன் கூட்டமாக மரியாதை செலுத்த வந்தார். அப்போது, அங்கிருந்த பூசாரி மற்றும் நினைவிட நிர்வாகிகள், “மரியாதை செலுத்திவிட்டு சீக்கிரம் கிளம்புங்கள்” என்று கூறினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்வாண்டையார், அங்கு நின்று கொண்டிருந்த நினைவிட நிர்வாகியான அழகுராஜாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, நினைவிட நிர்வாகிகள், பூசாரிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்ரீதர் வாண்டையார், தேவர் சிலை அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரை சமாதானப்படுத்தினார்.