பாலாகட்: ரூ.14 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய பெண் மாவோயிஸ்ட் மத்திய பிரதேசத்தில் சரண் அடைந்தார். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிர மாநிலங்களில் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டு வந்தவர் சுனிதா. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் மத்திய கமிட்டி உறுப்பினராகவும் இருந்தார். இவர் மீது 3 மாநிலங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அத்துடன், சுனிதா பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 3 மாநிலங்களும் சேர்ந்து 14 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ம.பி.யின் பாலாகட் பகுதியில் கடந்த 1-ம் தேதி சுனிதா சரணடைந்தார். மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்புப் படை உதவி கமாண்டர் ரூபேந்திர துருவ் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சுனிதா சரணடைந்தார். இவர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் தாலுகாவை சேர்ந்தவர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர்.
இதுகுறித்து ம.பி. முதல்வர் மோகன் யாதவ் கூறும்போது, ‘‘மாவோயிஸ்ட்கள் சரணடைய வேண்டும். இல்லையென்றால் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார். அதற்கு ஏற்பட்ட பலனாக சுனிதா சரணடைந்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.