சென்னை: ‘தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 படகுகளையும் நவ.3-ம் தேதி இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்துள்ளனர்.
இத்தகைய அத்துமீறிய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.