லக்னோ,
உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம் சனூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று பிரயாக்ராஜ் – சோபன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் இறங்கினர்.
அப்போது சில பயணிகள் எதிரே உள்ள நடைமேடைக்கு செல்ல படிகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து நடைமேடையில் ஏற முயற்சித்தனர்.
இந்நிலையில், பயணிகள் தண்டவாளத்தை கடந்துகொண்டிருந்தபோது அந்த தண்டவாளத்தில் ஹவுரா – கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்தது. இதில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரெயில் மோதியது. ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.