அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோரான் மம்தானி (Zohran Mamdani). இவர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் என்பதும், இந்த நூற்றாண்டில் நியூயார்க்கின் இளம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.
34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். இவர் தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றுள்ளார். 20 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் மம்தானி நியூயார்க் மேயராக பதவியேற்பார்.
கவனம் ஈர்த்த வெற்றி உரை: மம்தானி தனது வெற்றி உரையில் அப்படி என்னதான் பேசினார்? – “நான் உங்கள் ஆதரவால் மேயராகியுள்ளேன். இனி என் கடமை, ஊழல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது. இந்த ஊழல்தான் ட்ரம்ப் போன்ற பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்தது. முதலில் உள்ளூர் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பேன். நான் இந்த நகரின் மேயராக உயரடுக்கு செல்வந்தர்களுக்காக மட்டும் செயல்படுபவராக இல்லாமல், இந்த நகரில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவேன்.
அதிபர் ட்ரம்ப்புக்கு இன்று நான் சில வார்த்தைகளை சொல்ல விரும்புகிறேன். உங்களை அதிபராக்கிய மக்களுக்கு உங்களை வெளியேற்றவும் தெரியும். இன்றைய இரவு இந்த நியூயார்க் நகரின் நிண்ட வரலாறாக இருந்த அரசியல் சகாப்தத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ கூமோ தோல்வியடைந்துள்ளார். இந்த நாள் நியூயார்க் நகரில் அரசியலில் ஒரு திருப்புமுனை. இன்றைய தினம், சிலருக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கு ஓர் அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் ஓர் இளைஞர். நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோஷலிஸ்ட். ஆனால், நான் இதில் எதற்காகவும் மன்னிப்பு கோரப்போவதில்லை.” என்றார். ரமா துவாஜி என்ற சிரிய நாட்டில் பிறந்த ஓவியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் மம்தானி.
நேருவை மேற்கோள் காட்டி… – மேலும் தனது உரையில் மம்தானி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சையும் மேற்கோள் காட்டியிருந்தார். “ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை நான் இப்போது நினைவுகூர்கிறேன். பழையதில் இருந்து புதியததற்குள் புகும்போது ஒரு வரலாற்றுத் தருணம் உருவாகிறது. ஓர் யுகம் முடிந்து, ஒரு தேசத்தின் ஆன்மா ஒலிக்கும்போது ஒரு வரலாறு உருவாகிறது. நாம் இன்று பழையதிலிருந்து புதியதற்குள் அடியெடுத்து வைக்கிறோம்” என்றார்.
ட்ரம்ப் விடுத்திருந்த எச்சரிக்கை என்ன? – முன்னதாக நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ”நான் சாமானியர்களுக்கான மேயராக இருப்பேன், இன வேற்றுமைக்கு எதிரான மாற்றங்களைக் கொண்டு வருவேன், பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவேன், அரசு நடத்தும் மளிகைக் கடைகள் நியூயார்க்கில் உருவாக்கப்படும், மக்களுக்காக இலவச பேருந்து சேவை வழங்கப்படும், காவல் துறை செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்படும்” என்று பல்வேறு வாக்குறுதிகளை மம்தானி கொடுத்திருந்தார்.
மம்தானி முன்வைத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கூடுதல் வரிகளை விதிப்பதாகும். கோடீஸ்வரர்களுக்கு 2% வரியை உயர்த்தி அதன்மூலம் கார்ப்ரேட் வரியை 11.5%ஆக அதிகரித்து நகரின் வருமானத்தைப் பெருக்குவேன் என்று வாக்குறுத்தி அளித்தார்.

ஜோரானின் வாக்குறுதிகளுக்கு எல்லாம், பதிலடி கொடுத்த அதிபர் ட்ரம்ப், “இத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற நிதியை ஃபெடரல் அரசு தான் விடுவிக்க வேண்டும். வாக்குறுதிகளை அள்ளி வீசும் மம்தானி ஒரு கம்யூனிஸ்ட்” என்று நிதி ரீதியாக மிரட்டல் விடுத்திருந்தார்.
ஆனால், அதையும் உடைத்தெறிந்து மம்தானி அபார வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் நியூயார்க் நகரத்தில் மம்தானி பெற்றுள்ள வெற்றி வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவும் கூட.
ஏற்கெனவே அரசு முடக்கத்தால் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ள சூழலில், இந்தத் தேர்தலில் அந்த எதிர்ப்பலை எதிரொலித்திருக்கிறது. ஜோரான் மம்தானி வெற்றி உரை நிகழ்த்த வந்தபோது பின்னணியில், ‘தூம் மச்சாலே’ என்ற பிரபல பாலிவுட் பாடல் இசைக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னணியில் எலான் மஸ்க்? – ஜோரான் மம்தானியின் வெற்றிக்குப் பின்னால் எலாம் மஸ்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் செலவீனங்கள் ரீதியாக மஸ்க் நிதியுதவி அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஸ்க் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ட்ரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருந்தவர். ஆனால் ட்ரம்ப் விதித்த வரிகளால், எலான் மஸ்க் அதிருப்தியடைந்து அவரது நிர்வாகத்திலிருந்து வெளியேறினார். ட்ரம்ப்பின் தீவிர விமர்சகராகவும் மாறினார். இந்தச் சூழலில் ட்ரம்ப்புக்கு எதிராக ஒரு சரித்திர வெற்றியை ஸ்க்ரிப்ட் செய்ய மஸ்க் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்ரம்ப்பின் பதிலடி: மம்தானி வெற்றி குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “வாக்குச்சீட்டில் ட்ரம்ப் என்ற பெயரில், கூடவே அமெரிக்காவில் இப்போது அரசு முடக்க காலம். இந்த இரண்டு காரணங்களால் மட்டும்தான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.