நியூயார்க்: தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்தினம் நடைபெறற அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இருக்கக் கூடாது. ஏனென்றால் அங்கு நடைபெறும் விஷயங்கள் மிக மோசமானதாக உள்ளன. அதனால், நான் அங்கு செல்லவில்லை. ஜி20 அமைப்புக்கு அடுத்ததாக அமெரிக்கா தலைமை தாங்குகிறது. இந்த கூட்டத்தை மியாமியில் உள்ள எனது கோல்ப் கிளப்பில் நடத்த முன்பு திட்டமிட்டிருந்தேன்.
போரை நிறுத்தினேன்: இந்தியாவும் – பாகிஸ்தானும் கடந்த மே மாதம் போரில் ஈடுபட்டபோது, 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தை நிறுத்துவேன் என கூறினேன். மறுநாளே இரு நாடுகளும் போரை நிறுத்திக் கொண்டன. இதெற்கெல்லாம் காரணம் வரி தான். இல்லையென்றால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது. 8 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.