நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு

புதுடெல்லி:

இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும். அடுத்ததாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். இந்த கூட்டத்தொடர்களில் பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

குளிர்கால கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். பல்வேறு முக்கிய மசோதாக்களை இந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.