மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் – பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு

புர்னியா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிஹாரின் புர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அதற்காக அவர்களின் முழு முயற்சிகளும் நடந்து வருகின்றன. பிஹார் இளைஞர்களிடம் நான் ஒன்றை சொல்கிறேன், பிஹாரின் ஜென் ஸி தலைமுறையினரிடமும் நான் சொல்கிறேன், வாக்குச் சாவடியில் விழிப்புடன் இருப்பது உங்கள் பொறுப்பு, இதனை நடக்க விடாதீர்கள். அவர்கள் உங்கள் எதிர்காலத்தைத் திருட முயற்சிக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் வாக்குகளைத் திருடுகிறார்கள்” என்றார்

முன்னதாக, கிஷன்கஞ்சில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதற்கு பதிலாக, பிஹாரில் தயாரிக்கப்பட்டது என்று மொபைல் போன்களில் எழுதப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளில், நிதிஷ் குமார் எத்தனை உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை அமைத்துள்ளார்?. பிஹாரில் தொழிற்சாலைகளை அமைக்க நிலம் இல்லை என்று அமித் ஷா கூறுகிறார். அவர் மேடையில் பொய் சொல்கிறார். பிஹாரில் நிலத்திற்கு பஞ்சமில்லை. பிஹார் அரசு அதானிக்கு தேவையான அளவுக்கு நிலத்தை வழங்க தயாராக உள்ளது. அதானிக்கு ஏக்கர் ரூ.1 என்ற விலையில் நிலம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

பிஹாரில் நவம்பர் 6 அன்று நடந்த 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது, இது மாநில வரலாற்றில் மிக உயர்ந்த வாக்கு சதவீதம் ஆகும். 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11 அன்று நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்பட உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.