பாட்னா: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்டமாக நாளை 122 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நிறைவு நாளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மெகாகூட்டணி சார்பில் ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் 136 பெண்கள் உட்பட 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: 20 மாவட்டங்களை சேர்ந்த 122 சட்டப்பேரவை தொகுதிகளில் நவ.11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 3.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.95 கோடி பேர் ஆண்கள். 1.74 கோடி பேர் பெண்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர்கள் 943 பேர் உள்ளனர்.
45,399 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடையும். இந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லை மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இரண்டாம் கட்ட தேர்தல் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலின் போது 122 தொகுதிகளில் மிக அதிகபட்சமாக பாஜக 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு 20 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. ஆர்ஜேடி-க்கு 33, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு 11, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன. ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளை தக்க வைக்கவும், கூடுதல்தொகுதிகளில் வெற்றி பெறவும் தேசிய ஜனநாயக கூட்டணி, மெகா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்துள்ளனர்.
பிஹாரின் சீமாஞ்சல் பகுதி மக்கள்தொகையில் சுமார் 17 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். இவர்களது வாக்குகளைப் பெற மெகா கூட்டணி – ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு பணியில் 4 லட்சம் பேர்: இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிஹார் டிஜிபி வினய் குமார் கூறியதாவது: பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 7 மாவட்டங்கள் நேபாள எல்லையில் உள்ளன. இதனால், 726 கி.மீ. தூர எல்லை மூடப்பட்டுள்ளது. நேபாளத்தில் இருந்து வரும் வாகனங்கள் பிஹாரில் நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில போலீஸார், துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படை உட்பட சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாட்னாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து 122 தொகுதிகளின் வாக்குப்பதிவும் முழுமையாக கண்காணிக்கப்படும்.
முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 14-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு
களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.