பச்மாரி: ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு என்றும் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளன. தரவுகளைப் பார்த்த பிறகு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை. எங்களிடம் இன்னும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, விரைவில் அதை வெளிப்படுத்துவேன்.
தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு. எங்களிடம் விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரை நாங்கள் மிகக் குறைவாகவே வெளிக்காட்டினோம், ஆனால் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஜனநாயகம் மற்றும் அம்பேத்கரின் அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் நேரடியாக கூட்டு சேர்ந்து இதைச் செய்கிறார்கள். இது நாட்டை, பாரத மாதாவை சேதப்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.