மதுரை: மதுரை அருகே போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (25).
இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2). இந்நிலையில், அனஞ்சியூர் பகுதியில் இறந்த உறவினர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மனைவி, குழந்தையுடன் பிரசாத் நேற்று முன்தினம் சென்றார்.
பின்னர் அங்கிருந்து மதுரை நோக்கி வந்தபோது, சக்குடி அருகே எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பிரசாத், சத்யா, அஷ்வின் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்ட பூவந்தி போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், மூவரின் உடல்களை வாங்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மறுத்துவிட்டனர். மேலும், மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்படுத்திய போலீஸ் வாகனத்திலிருந்த 5 காவலர்களை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படாததால், மூவரின் உடல்களை வாங்காமல் உறவினர்கள் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சத்யாவின் சகோதரி மங்கையர்க்கரசி கூறும்போது, “காவல் துறையினர் தவறான பாதையில் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு மூவரும் இறந்துள்ளனர். காவலர்கள் போதையில் இருந்ததால்தான் விபத்து நடந்தது. எனவே, அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்றார்.