இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக் கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது 3 சகோதரிகள் நோரின் நியாசி, அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சென்றபோது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்களும், இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சியினரும் சிறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறைக்குள் இம்ரான்கானை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துவிட்டதாக தகவல் பரவியது.

இதையடுத்து அடியாலா சிறை வளாகத்தில் தெக்ரீக்-இ-இன்சாப் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். ஆனாலும் இம்ரான்கானின் சகோதரி அலீமா கான் மற்றும் கட்சி தொண்டர்கள் சிறைக்கு வெளியே தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அலீமா கான் மற்றும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இம்ரான்கானை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்றும், வருகிற 2-ந்தேதியும் இம்ரான் கானை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கடந்த ஒரு மாதமாக இம்ரான்கானை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறையில் இமரான்கான் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை சிறைத் துறை நிர்வாகம் மறுத்துள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.