Rajini: “பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும்'' – விருது பெற்ற ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான்

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான நவம்பர் 28 அன்று, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

ரஜினி
ரஜினி

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் எக்ஸ் பக்கத்தில், “’வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.

மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.

திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.

‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்றுள்ள ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.