சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

துபாய்:
சவுதி அரேபியாவில் கொலை வழக்கு, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் மரண தண்டனை பெற்ற 81 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஏமனைச் சேர்ந்த 7 பேர், சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். 1979 ஆம் ஆண்டு மக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 63 போராளிகளுக்கு ஜனவரி 1980-ல் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையின் எண்ணிக்கையை விட இன்று அதிக நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் அல்-கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத குழு உறுப்பினர்கள் மற்றும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்று சவுதி அரசு கூறி உள்ளது. இந்த தண்டனை எங்கு வைத்து நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. 
கடைசியாக 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தியதற்காக ஷியா மதகுரு உள்ள 47 பேருக்கு அப்போது தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2019ம் ஆண்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற 37 சவுதி அரேபியர்களின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2020ல் 27 பேருக்கும் 2021ல் 67 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகில் மிகக்கடுமையான சட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.