தந்தையை பிளேடால் கழுத்தறுத்து கொன்ற பிளஸ்-2 மாணவன் போலீசில் சரண்

திருப்பதி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 42).நெசவு தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி.இவர்களுக்கு 17 வயதில் மகனும் 15 வயதில் மகளும் உள்ளனர்.
கதிரேசன் கடந்த 3 ஆண்டுக்கு முன் தனது மனைவி மகளுடன் வேலை தேடி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், மதன பள்ளிக்குச் சென்றார்.அங்கு நெசவு தொழில் செய்து வந்தார். ஆனால் அவரது மகன் மட்டும் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்தநிலையில் கதிரேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து மலர்கொடி கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆரணியில் உள்ள மகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மதன பள்ளிக்கு வந்த அவரது மகன் பெற்றோரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கதிரேசன் மனைவியை தாக்கினார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது மகன் தந்தையை அடித்துக் கீழே தள்ளியுள்ளார். பின்னர் பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு நிலைகுலைந்த கதிரேசன் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மதனபள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை கொலை செய்ததாக கூறி அவர் சரணடைந்தார்.
இன்ஸ்பெக்டர் ஈதுரு பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிரேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.