மாணவனை கொன்று 2 இடங்களில் பிணத்தை மாற்றி வைத்த நண்பர்கள்- 4 ஆண்டுக்கு பின் போதையில் உளறியதால் சிக்கினர்

திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ஷாகல்லு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷா (வயது17). இவர் வெளியூரில் தங்கி தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2018 -ம் ஆண்டு தீபாவளி விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீ வர்ஷா அங்குள்ள கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது ஸ்ரீவர்ஷாவுக்கும் அவரது எதிர்த்தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
அன்று இரவு ஷேக் ரஷீத், ஆதித்யா, முனேந்திரா ஆகியோர் ஸ்ரீ வர்ஷாவை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீ வர்ஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பிணத்தை அங்குள்ள செப்டிக் டேங்கில் வீசிவிட்டு 3 பேரும் ஒன்றும் தெரியாததுபோல் இருந்தனர்.
வெளியே சென்ற மகன் வராததால் அவரது தந்தை ரத்தினகுமார் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ வர்ஷாவை தேடி வந்தனர். ஸ்ரீ வர்ஷா கிடைக்காததால் மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 1 ஆண்டு கழித்து ஸ்ரீவர்ஷாவின் உடலை வீசி சென்ற இடத்திற்கு வந்த ஷேக் ரஷீத் உள்பட 3 பேரும் செப்டிக் டேங்கில் கிடந்த ஸ்ரீவார்ஷாவின் எலும்புகளை எடுத்துச்சென்று ரெயில்வே கேட் அருகே உள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷேக் ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் ஸ்ரீவர்ஷாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை எனஷேக் ரஷீத் தனது நண்பர்களிடம் உளறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் ஷேக் ரஷீத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யா, முனேந்திரா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.