அரசு குடியிருப்பில் இருந்து 90 வயது ஒடிசி நடனக் கலைஞர் வெளியேற்றம்

புதுடெல்லி: டெல்லியில் வசித்து வருபவர் 90 வயதான நடனக் கலைஞர் குரு மாயாதர் ராவத். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவருக்கு டெல்லி ஆசிய விளையாட்டு கிராமத்திலுள்ள அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு அதில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சிலருக்கு அரசு வீட்டு ஒதுக்கீட்டை 2014-ம் ஆண்டு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை ரத்து செய்தது. இதில் நடனக் கலைஞர் குரு ராவத், நடனக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் ஆகியோரும் அடங்குவர்.

இந்த முடிவை எதிர்த்து குருராவத், பிர்ஜு மகாராஜ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே பிர்ஜு மகாராஜ் காலமானார். இந்நிலையில் குரு ராவத், பிர்ஜு மகாராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து வழக்கில் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது. மேலும் ஏப்ரல் 25-க்குள் காலி செய்யுமாறு கடந்த பிப். 25-ம்தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று குரு ராவத்தின் வீட்டை மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் காலி செய்தனர். அவருடைய உடைமைகள், பத்மஸ்ரீ விருது உள்ளிட்டவை வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குரு ராவத்தின் மகளும், கலைஞருமான மதுமிதா ராவத் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் வீட்டை அதிகாரிகள் காலிசெய்து வெளியேற்றிவிட்டனர்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.