சினிமா வரலாற்றில் முதல்முறை ஒரு சிபிஐ டைரி குறிப்பு 6ம் பாகம் உருவாகிறது

திருவனந்தபுரம்: சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு படத்தின் 6வது பாகம் உருவாகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கே.மது இயக்கத்தில் சேதுராம அய்யர் கேரக்டரில் மம்முட்டி நடித்த படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. இது 1988ல் வெளியானது. எஸ்.என்.சுவாமி கதை எழுதியிருந்தார். ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து மம்முட்டியின் சேதுராம அய்யர் கேரக்டரை உருவாக்கப்பட்டது. கொச்சின் மட்டாஞ்சேரியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராதா வினோத் ராஜு, ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்தவர். கடந்த 1989ல் ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ படத்தின் 2ம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரிலும், 2004ல் 3ம் பாகம் ‘சேதுராம அய்யர் சிபிஐ’ என்ற பெயரிலும், 2005ல் 4ம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ என்ற பெயரிலும், 2022ல் 5ம் பாகம் ‘சிபிஐ 5: தி பிரெய்ன்’ என்ற பெயரிலும் வெளியானது. 5 பாகங்களிலும் கே.மது, எஸ்.என்.சுவாமி, மம்முட்டி, முகேஷ், ஜெகதி குமார் இணைந்து பணியாற்றி இருந்தனர். தற்போது இப்படத்தின் 6ம் பாகத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய மம்முட்டி, ‘மர்மக்கொலையில் உள்ள முடிச்சுகளை சேதுராம அய்யர் துப்பறியும் பாணியில் இருந்து மாறி, மிகப்பெரிய ஊழல் மற்றும் கொள்ளையை அவர் கண்டுபிடிப்பது போல் கதை உருவாக்கும்படி எஸ்.என்.சுவாமியிடம் கூறியுள்ளேன். ஒருவேளை 6ம் பாகம் இதை மையமாக வைத்து உருவாகலாம் என்று நம்புகிறேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.