சுகாதார வசதிகள் இல்லாத சவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சவர்மா சாப்பிட்டதால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். இந்த சோதனையில் தரமற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட உள்ள பல்நோக்கு மகப்பேறு மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, புதிதாக கட்டியுள்ள அதிநவீன அறுவை சிகிச்சை மையம் கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத ஷவர்மா உணவு கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.