
ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் கதை ரெடி : அல்போன்ஸ் புத்ரன் அறிவிப்பு
சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அல்போன்ஸ் புத்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிருத்விராஜ், நயன்தாரா நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து அவர் பகத்பாசில், நயன்தாரா நடிக்கும் பாட்டு என்ற படத்தை இயக்க உள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்று கூறிவந்த அல்போன்ஸ் புத்திரன் தற்போது ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் வகையிலான கதை ஒன்று தன்னிடத்தில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமான ஒரு கதையை வைத்து உள்ளேன். இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை கூறுவேன். அந்த கதை நிச்சயம் இருவருக்கும் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இன்னும் என் வாழ்நாளில் இருவரையுமே ஒரு முறை கூட சந்திக்கவில்லை.
அதே நேரத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்து, எதிர்காலத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் அந்த கதையை கூறுவேன். அந்த கதை அவர்களுக்கு பிடித்துவிட்டால் என்னுடைய முழு திறமையையும் அந்த படத்தில் பயன்படுத்தி, நல்லதொரு பொழுதுபோக்கு படமாக எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.