உக்ரைன் தலைநகரமான கீவ்வில், ரஷ்ய தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் கடற்கரையில் தஞ்சமடைந்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு படையெடுத்துள்ளனர்.
கீவ் நகரம் ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டு, ராக்கெட் தாக்குதல்களால் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சில வாரங்களில் இந்த காட்சிகள் அரங்கேறியுள்ளது.
கீவ் நகரின் டினீப்பர் நதிக்கரையில் குவிந்த மக்கள் 34 டிகிரி வெயிலுக்கு இதமாக தண்ணீரில் குதித்து நீச்சலடிக்கவும் கைப்பந்து விளையாட்டுகளை விளையாடுவதுமாக குதூகலமாக காணப்பட்டனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கீவ் நகரம் மரண பீதியில் உறைந்திருந்தது. எங்கும் மயான அமைதி, மக்கள் பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
புடினின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் நகரின் பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டு, புகைமூட்டமாக காணப்பட்டது.
ஆனால் உக்ரைன் துருப்புகள் உயிரை துச்சமாக மதித்து தலைநகரை அரணாக காத்தனர்.
தற்போது ரஷ்ய துருப்புகள் கீவ் நகரை விட்டு வெளியேறி கிழக்கு உக்ரைனில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், உக்ரைன் துருப்புகள் தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கீவ் மீதான அச்சுறுத்தல் விட்டுவிலகவில்லை எனவும், கடந்த ஞாயிறன்று ரஷ்ய ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


