சிவசேனா பாலாசாஹேப் கட்சி | அதிருப்தி குழுவுக்கு பெயர் வைத்த ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்

மகாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. 40 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் அசாமில் முகாமிட்டுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இந்நிலையில் அந்தக் குழுவிற்கு சிவசேனா பாலாசாஹேப் என்று அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தரப்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிருப்தி அணியில் உள்ள சிவசேனா எம்எல்ஏ தீபக் குமார் கேசர்கர், எங்கள் குழுவானது சிவசேனா பாலாசாஹேப் குழு என்றழைக்கப்படும். நாங்கள் எந்த கட்சியுடனும் சேர மாட்டோம் என்றார்.

கோரிக்கையும் பிடிவாதமும்: மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்துள்ளனர். இவர்கள் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களின் கோரிக்கையாக, சிவசேனா மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இருக்கிறது. இந்தக் கோரிக்கை தொடர்பாக சிவசேனா, “மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து சிவசேனா விலக வேண்டுமானால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வரவேண்டும். அதன்பின்பே மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து சிவசேனா நிச்சயம் பரிசீலிக்கும்” என்று கூறியிருந்தது.

கூட்டணிக் கட்சிகளும் ஆலோசனை: சிவசேனா தனது அதிருப்தி எம்எல்ஏக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மற்றும் மூத்த தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸும் எந்த சூழ்நிலையிலும் சிவசேனாவுடன் துணை நிற்போம் என்று கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.