இயக்குநர் சுசி கணேசன் குறித்து கருத்து தெரிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, கவிஞர் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
இயக்குநர் சுசி கணேசன், உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க லீனா மணிமேகலை, சின்மயி ஆகியோருக்கும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும், ஆங்கில இணையதள செய்தி நிறுவனத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குனர் சுசி கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுசி கணேசன் தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் லீனா மணிமேகலை தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து பத்திரிக்கைகளில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என கேள்வி எழுப்பினார். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என லீனா மணிமேகலைக்கு அறிவுறுத்த வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சுசி கணேசன் வழக்கு தொடர்பாக லீனா மணிமேகலை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“