கேரளாவைச் சேர்ந்த ஆடம் ஹாரி, பெண்ணிலிருந்து ஆணாக மாறிய திருநம்பி. இந்தியாவின் முதல் ‘திருநம்பி விமானி’ என்னும் பெருமைக்குரியவர். சிவில் விமானியாக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த ஆடம் ஹாரிக்குக் கேரள அரசு பல்வேறு உதவிகள் செய்தது. இதையடுத்து ஆடம் ஹாரி திருவனந்தபுரத்திலுள்ள ‘ராஜீவ் காந்தி அகாடமி ஃபார் ஏவியேஷன் டெக்னாலஜி’ கல்லூரியில் படித்தார். இந்நிலையில் தற்போது பயிற்சி விமானியாக இருக்கும் ஆடம் ஹாரி, பைலட் உரிமம் வேண்டி விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ-விற்கு (DGCA – Directorate General of Civil Aviation) விண்ணப்பித்திருந்தார்.
பைலட் உரிமம் பெறுவதற்குப் பல சோதனைகளையும் விதிகளையும் வைத்திருக்கிறது டிஜிசிஏ. இதன் எல்லா சோதனைகளிலும் வென்ற ஆடம் ஹாரிக்கு மருத்துவ சோதனை பெரும் சிக்கலாக அமைந்துவிட்டது. அதில், ஆடம் ஹாரி பெண்ணிலிருந்து ஆணாகப் பாலினத்தை மாற்றுவதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் அந்தச் சிகிச்சைத் தொடர வேண்டும் என்றும் அவரின் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ‘Gender Dysphoria’ என்று சொல்லப்படும் பாலின வலியுணர்வு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

பைலட் உரிமம் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் பங்குபெற்ற மருத்துவத் துறை வல்லுநர்கள், இந்த ‘Gender Dysphoria’ பிரச்னையால் பிற்காலத்தில் மனரீதியிலான பதற்றம் (Anxiety), மனச்சோர்வு (Depression) போன்றவை ஏற்படலாம் என்று தெரிவித்திருக்கின்றனர். இதனால் டிஜிசிஏ, ஆடம் ஹாரி விமானியாகத் தகுதியற்றவர் என அறிவித்தது.
இதையடுத்து ஆடம் ஹாரி, இது நோய் அல்ல தன் பாலினத்திலிருந்து பிற பாலினத்திற்கு மாறுகிறவர்கள் எடுத்துக்கொள்ளும் வழக்கமான சிகிச்சைதான். எனவே டிஜிசிஏ-க்கு எதிராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகக் கூறினார்.
இந்நிலையில் இது பற்றிக் கூறிய டிஜிசிஏ, “திருநம்பிகள் பைலட் உரிமம் மற்றும் அதற்கான மதிப்பீடுகளை (ratings) பெறுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் விமான விதிகள், 1937-ல் குறிப்பிடப்பட்டுள்ளது படி சம்பந்தப்பட்ட நபரின் வயது, கல்வித் தகுதிகள், மருத்துவத் தகுதி, அறிவு அனுபவம் போன்றவற்றை உறுதிசெய்வது அவசியம். விண்ணப்பதாரர் செய்துள்ள ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை அவருக்குப் பாதகமான அறிகுறிகள் அல்லது எதிர்விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும்” என்றது.
மேலும், “ஜனவரி 2020-ல் மருத்துவப் பரிசோதனைக்கு ஆடம் ஹாரி விண்ணப்பித்தபோது, பெண்ணிலிருந்து ஆணாகப் பாலினத்தை மாற்றுவதற்கான ஹார்மோன் சிகிச்சையை அவர் மேற்கொண்டு வருவதாகவும், சிகிச்சை தொடர வேண்டும் என்றும் அவரது மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. அதேபோல அவர் சமர்ப்பித்த மனநல அறிக்கையும் முழுமையடையவில்லை. எனவே, ஹார்மோன் சிகிச்சையை அவர் முடிக்கவேண்டும். இந்தக் காரணங்களால்தான் ஆறு மாதக் காலத்திற்கு பைலட் ஆவதற்கு மருத்துவத் தகுதியற்றவராக அவர் அறிவிக்கப்பட்டார். ஆனால், இது தற்காலிகம்தான்.

ஆகஸ்ட் 2020-ல் அவர் செய்து கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவர் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்தினார் என்றும் உடல் ரீதியாக அவர் ஒரு பெண் (physiologically female) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அவரது ‘ஆயிஷா டிஎஸ்’ என்னும் பழைய பெயரும் உள்ளது. இந்த மருத்துவச் சான்றிதழ் ஆகஸ்ட் 23, 2022 வரை செல்லுபடியாகும். அதுமட்டுமின்றி ஆடம் ஹாரி மாணவர் பைலட் உரிமத்தைப் பயன்படுத்தி, ஒரு வணிக விமானம் ஓட்டும் பைலட் உரிமத்திற்குத் தகுதி பெறுவதற்குத் தேவையான மணிநேரங்களைப் பறக்கவில்லை என்று கட்டுப்பாட்டாளர் கூறினார். இதையெல்லாம் கருத்தில்கொண்டே ஆடம் ஹாரி விமானியாகத் தகுதியற்றவர் என டிஜிசிஏ அறிவிருந்தது.
இருப்பினும், அவரது பெயரை ஆயிஷா டிஎஸ் என்பதிலிருந்து ஆடம் ஹாரி என்று பெயர் மாற்றம் செய்து டிஜிசிஏ இணையதளத்தில் ‘Transgender’ என்ற பிரிவின் கீழ் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பின்னர் புதிய மருத்துவப் பரிசோதனைக்கு அவர் விண்ணப்பிக்கலாம். ஆடம் ஹாரியின் விண்ணப்பம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்கள் படி பரீசலிக்கப்படும்” என்று டிஜிசிஏ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.