திமுக.,வின் பொருளாளரும் எம்பி.,யுமான டி.ஆர்.பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்-அமைச்சராக இருந்தபோது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது” என்று வசனம் பேசியிருக்கிறார்.
தங்களுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ்டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட, ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ நாங்கள் என்று ஊரறிய-உலகமறிய சம்பவம் நிகழ்த்தினார்கள்.
கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் இந்தத் தெருச்சண்டையை மறைக்க, தி.மு.க மீது பாய்கிறார் பழனிசாமி. முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வதுதான் கழக ஆட்சி. உங்களைப் போல மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஆட்சியல்ல.
அ.தி.மு.க. ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். டி.ஜி.பி. அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய ஒன்றிய பா.ஜ.க அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத-முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக தி.மு.க.வைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.