நிலத் தகராறு: சகோதரி, மைத்துனரைப் பட்டாக் கத்தியால் துரத்தி வெட்டிய தம்பி! – போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள ஆயந்தூரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவருக்கும், இவரின் சகோதரி ராஜசுலோச்சனா குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அண்மையில் ஒருநாள் நிலத்தின் வரப்பு அருகேயிருந்த ஓடையில் மண் எடுப்பதில் அரிகிருஷ்ணனுக்கும், அவர் சகோதரியின் கணவர் அய்யனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் மாலை (15.07.2022) விழுப்புரம் – திருக்கோயிலூர் சாலையில் மீண்டும் அரிகிருஷ்ணனுக்கும் அவர் சகோதரி ராஜசுலோச்சனா குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பதைபதைக்கும் வீடியோ காட்சி

ஒருகட்டத்தில் அதீத கோபத்திற்குள்ளான அரிகிருஷ்ணன், தான் வைத்திருந்த பட்டா கத்தியைக்கொண்டு சகோதரியையும், அவர் கணவரையும் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ராஜசுலோச்சனா, அய்யனார் ஆகியோரை மீட்ட பகுதி மக்கள், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காணை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சி.எஸ்.ஆர் மட்டும் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காணை காவல் நிலையம்

நிலத் தகராறு பிரச்னையில் தம்பியே தன் சகோதரியையும், அவர் கணவரையும் பட்டா கத்தி கொண்டு துரத்தி துரத்தி வெட்டும் பதைபதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.