நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் திட்டம்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (இன்று) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடவுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலும் இன்று நடைபெறுவதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க ஏதுவாக அதற்கான ஏற்பாடுகளும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத் தொடரில் 24 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், புதிதாக கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டம், வேலையின்மை, நாடாளுமன்றத்தில் உபயோகப்படுத்தக் கூடாத வார்த்தைகள், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவற்றை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

தமிழ்நாடு மற்றும் சத்தீஷ்கரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான மசோதாக்கள், அச்சு மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, எரிசக்தி பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை (திருத்தம்) மசோதா, 2019; ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்பாடுகளுக்கு தடை) திருத்த மசோதா, 2022 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை இந்த கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான திட்டத்தை பாஜக அரசு வைத்துள்ளது. அதேபோல், வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2021, கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2019 மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2021 ஆகியவை மக்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.