செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த கஜசுபமித்ரா (வயது14) பூஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவ , மாணவிகளுக்கு செய்முறை தேர்வு அப்பள்ளியின் 2 ஆவது மாடியில் உள்ள வகுப்பறையில் நடந்து கொண்டிருந்தது .
அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட் பேப்பர் வைத்து கொண்டு, தேர்வு எழுத முயன்றதாக கூறப்படுகிறது. இதனை வகுப்பறையில் உள்ள ஆசிரியை அறிவுரை கூறி கண்டித்துள்ளார். மேலும், நாளை பள்ளிக்கு வரும் போது பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் பயந்து மாணவி திடீரென 2ஆவது மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாணவி கஜசுபமித்ரா மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தற்கொலை முயற்சி தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.