வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: டிவி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன. இவை நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கின்றன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பேசியதாவது: டிவி விவாத நிகழ்ச்சிகள், சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன. இவை நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு எதிர்வினையாற்றாமல் இருப்பதால், அவர்கள் பலமில்லாதவர்கள், கையாளாகதவர்கள் என்று அர்த்தமில்லை.

அதிநவீன ஊடக அங்கங்களின் வீச்சு அதிகம். ஆனால், அவற்றால் எது சரி எது தவறு எனத்தெரியவில்லை. நல்லது எது கெட்டது எது உண்மையானது எது போலியானது எது என பகுப்பாய்வு செய்ய தெரியவில்லை. ஊடகங்களில் எது வைரலாக பரவுகிறதோ அதை வைத்து ஒரு வழக்கின் போக்கை தீர்மானிக்க முடியாது. பல ஊடகங்கள் தாமாகவே கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொண்டிருக்கின்றன.
போதிய அறிவு இல்லாமல், ஏதோ ஒரு சார்புடன் நடத்தப்படும் விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு. ஊடகங்களில் வெளியாகும் சார்புடைய செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது. இதனால், நீதியை நிலைநிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.

நாட்டில் அச்சு ஊடகங்கள் ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன. காட்சி ஊடகங்களில் நடக்கும் டிவி விவாதங்கள் பலவும் ஒரு பக்க சார்புடையதாகவும் அரைகுறை தகவலுடைய ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். காட்சி ஊடகங்கள் எல்லை மீறி செல்வதாலும், பொறுப்பை உணராமல் செயல்படுவதாலும் ஜனநாயகத்தை இரண்டு அடி பின்னால் இழுத்து சென்று விடுகிறது. காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement