இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாரக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன்(37). இவருடைய மனைவி ஜோதி. மார்கண்டன் பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சொந்த ஊரில் கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் மார்கண்டன் ஊருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து திருவிழாவை முடித்துவிட்டு இன்று காலை 7 மணியளவில் மார்கண்டன், ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில், மனைவி ஜோதி(35) மற்றும் உறவினரின் மகள் சத்திய ஸ்ரீ(9) ஆகியோருடன் தர்மபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒகேனக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மார்கண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
மேலும் மனைவி ஜோதி மற்றும் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த மார்கண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.