புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 10-ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. பேரவைக்குள் பதாகைகள், பேனர்கள் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: ”புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்வார்.
காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருகிறோம். சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கான புதிய வரைப்படம் இறுதி செய்யப்பட்டு விரைவில் பூமி பூஜை நடக்கும். அதற்கான தேதி விரைவில் தெரிவிக்கப்படும்.
ஒத்துழைப்பு தராத அதிகாரிகளை இடமாற்றம் செய்கிறோம். எனினும் இன்னும் 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை” என்று குறிப்பிட்டார்.