தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நோட்டீஸ் உங்கள் கையில் கிடைத்த உடன் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இந்தச் செய்திக் கட்டுரை:
புதிய சொத்து வரி எவ்வளவு?
உங்களின் தெருக் கட்டணம், சதுர அடி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய சொத்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
பழைய சென்னை மாநகராட்சி
சதுர அடி | உயர்வு சதவீதம் |
600-க்குள் | 50 சதவீதம் |
601 – 1,200 | 75 சதவீதம் |
1,201 – 1,800 | 100 சதவீதம் |
1,800-க்கு மேல் | 150 சதவீதம் |
2011-ல் இணைந்த பகுதிகள்
சதுர அடி | உயர்வு சதவீதம் |
600 க்குள் | 25 சதவீதம் |
601 – 1,200 | 50 சதவீதம் |
1,201 – 1,800 | 75 சதவீதம் |
1,800-க்கு மேல் | 75 சதவீதம் |
பழைய கட்டிடங்களுக்கு தள்ளுபடி
சென்னை மாநகராட்சியில் பழைய கட்டடங்களுக்கு தேய்மான அடிப்படையில் மொத்த சொத்து வரியில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
- 1997 மார்ச் வரை – 10 சதவீதம்
- 1997 ஏப்ரல் முதல் 2007 மார்ச் வரை – 6 சதவீதம்
- 2007 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரை – 3 சதவீதம்
- 2017 ஏப்ரல் முதல் – இல்லை
நோட்டீசில் என்ன இருக்கும்
புதிய சொத்து வரி நோட்டீஸில் நீங்கள் புதிதாக கட்ட வேண்டிய சொத்து வரி எவ்வளவு என்ற விவரம் இருக்கும். தெருவின் மதிப்பு, கட்டட பரப்பளவு, காலிமனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, சொத்து வரி குறித்து தெளிவாக தெரிவிக்கப்படும். உங்களின் பகுதியில் அடிப்படை தெருக் கட்டணம் எவ்வளவு என்பதை அடிப்படையாக இந்த புதிய சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும்.
மேல்முறையீடு செய்வது எப்படி?
புதிய சொத்து வரி அதிகமாக உள்ளது என்று நினைத்தால், நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். சொத்து வரி நோட்டீஸ் உங்களின் கையில் கிடைத்த நாளில் இருந்து 15 நாட்களுக்குள் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இணையதளம் மூலம் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யலாம்.
மேல்முறையீடு விசாரணை
சொத்து வரி மேல்முறையீட்டு மனுக்கள் மீது வட்டார துணை ஆணையர்கள் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணையில் சரியான காரணம் இருந்தால் உங்களின் மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து உங்களின் சொத்து வரி மாற்றியமைக்கப்படும். சரியான காரணம் இல்லை என்றால் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படும்.
இணையதளங்களின் விவரம்: